ரயில்களில் மோதியதில் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 103 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பவித்ராவன்னியாராய்ச்சி, காட்டு யானைகளை பாதுகாப்பதற்கு ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சமன்பிரிய ஹேரத் எம்பியின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே
வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிஇவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில், 103 காட்டு யானைகள் ரயில்களில் மோதி உயிரிழந்துள்ளன.
இவைகள், உயிரிழப்பதை தடுப்பதற்கு முறையான பொறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதற்கமைய ரயில்வே திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைந்து, ரயில் பாதைகளில் காட்டு யானைகள் பயணிக்கும் பகுதிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளை விசேட பாதுகாப்பு பகுதிகளாகவும், கண்காணிப்பு பகுதிகளாகவும் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் கடக்கும் பகுதிகள் குறித்து ரயில் சாரதிகளுக்கு தெளிவுப்படுத்தவும், புகையிரத பாதைகளில் வளைவு பகுதிகளில் காட்டு யானைகள் கடக்கும் போது அவைகளை முன்கூட்டியதாக அவதானிக்கும் வகையில் விசேட இயந்திரங்கள் பொருத்துவதற்கும், ரயில் பாதை வளைவுகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)