மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக்குளத்தின் கீழ் 30,038 ஏக்கரில் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுக்கரைக்குளத்து நீர் அளவைக்கொண்டு நடப்பு வருடமாகிய இந்த வருடத்தில் சிறுபோகச் செய்கை 12:1 என்ற விகிதாசார அடிப்படையில் 2,875 ஏக்கரில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
கட்டுக்கரைக்குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பான கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயிலங்குளம் கட்டுக்கரைக்குள விவசாயிகள் கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார்.
சிறுபோகச் செய்கைக்கு இம்மாதம் 27ஆம் திகதி முதல் நீர் விநியோகிக்கவுள்ளதாகத் தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகள் விதைப்பை மேற்கொள்ள வேண்டுமென்றார்.
மேலும் காப்புறுதி செய்யப்பட வேண்டிய இறுதி திகதியாக ஜூன் 16ஆம் திகதி உள்ளதுடன், அறுவடைக்கான இறுதி திகதியாக ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.
ஆகவே மேற்படி தீர்மானத்துக்கமைய சிறுபோகச் செய்கையை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். மன்னார் விவசாயிகள் கிடைக்கும் நீரை உச்சப் பயன்பாட்டில் பயன்படுத்த வேண்டுமெனவும், அவர் தெரிவித்தார்.
தலைமன்னார் விசேட நிருபர்