குடம்பிகளின் பரவல் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் மிக வேகமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரித்து வருவதாக, கண்டி மாவட்ட சமூக வியாதிகள் ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் கிருசாந்த மாசச்சி தெரிவித்தார்.
கண்டி மாவட்டச் செயலகத்தில் டெங்கு ஒழிப்பு தொடர்பான குழுவின் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன், இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பும் பிரிவினரால் அடையாளம் காணப்பட்ட அதிக அவதானம்மிக்க வலயங்கள் நான்கில் கண்டி மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அடங்குவதாகத் தெரிவித்த அவர், ஆகையால் உள்ளூராட்சி அமைப்புகள் இது தொடர்பாக விழிப்படைய வேண்டுமென்றார்.
இந்த வருடத்தின் ஏப்ரல் மாத இறுதியில் 1,547 பேர் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர்களில் 232 பேர் ஏப்ரல் மாதத்தில் மட்டும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
இவர்களில் 15 பேர் கண்டி மாநகர எல்லையில் வசிப்பதாகவும், அவர் கூறினார். கண்டி மாவட்ட டெங்கு ஒழிப்புப் பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே, கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விசேட வைத்திய நிபுணர் அக்குறணை குறூப் நிருபர்