இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் திறந்து வைத்து பிராந்திய கல்வியியலாளர்களுக்கு உதவுமாறு, தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணித, விஞ்ஞானப்பிரிவு துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைச் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவிடமே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையானது, தற்பொழுது பயிற்சி ஆசிரியர்கள் இல்லாத நிலையில் தொழிற்பாடின்றி காணப்படுகிறது. எதிர்காலத்திலும் இந்நிலையத்தில் ஆசிரியர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப் போவதில்லையெனத் தெரியவருகிறது. ஆகையால் இந்தக் கலாசாலையில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளை திறக்கப்படுமானால், அது பிராந்திய கல்வியியலாளர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்” என்றார்.
இதற்கு பதிலளித்த அதாஉல்லா எம்.பி., இந்த வேண்டுகோள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று நம்பிக்கை வெளியிட்டார்.
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்