நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணிநேர மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டுமென துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மின்தடைக்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளே காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து துறைசார் தரப்பினருடன் மின்சார தடை தொடர்பில் தொலைபேசியில் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னெடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதிசெய்யுமாறு பணித்திருந்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதி வெப்பநிலையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏதுநிலைகள் அதிகளவில் உள்ளன. அதுமட்டுமல்லாது மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட கூடும். இதேவேளை நாடு முழுவது இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது.
அந்தவகையில் எந்தவித தடைகளும் ஏற்படாத வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும்.
இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள் மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
(யாழ்.விசேட நிருபர்)