டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களுக்கான போட்டிக் கட்டணத்தை இலங்கை கிரிக்கெட் சபை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.
இதன்படி வெற்றி பெறும் போட்டிகளுக்கான கட்டணம் 7,500 டொலர்களில் இருந்து 15,000 டொலர்கள் வரை 100 வீதம் அதிகரித்துள்ளது.
அதேபோன்று சமநிலையாகும் போட்டிகளுக்கான கட்டணம் 12,500 டொலர்களாகவும் தோல்வி அடையும் போட்டிகளுக்கான கட்டணம் 10,000 டொலர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டுக்கு முன் டெஸ்ட் போட்டிகள் பெரும் சவாலை சந்தித்து வரும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
‘சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மேலும் வீரர்கள் ஈடுபாடு காட்டுவதை ஊக்குவிக்க நாம் விரும்புகிறோம்’ என்று இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது டி20 சர்வதேச போட்டி ஒன்றுக்காக இலங்கை வீரர் ஒருவர் 3000 டொலர்களும் ஒருநாள் சர்வதேச போட்டி ஒன்றுக்காக வீரர் ஒருவர் 4000 டொலர்களும் பெறும் நிலையில் அந்த தொகையிலும் அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டார்.