உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ஒரு நாளில் மட்டும் அல்லாது வருடம் முழுவதும் பாதுகாக்க ஒன்றுபடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச தொழிலாளர் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக, பாரதூரமான அவலங்களை எதிர்கொண்டு, நாட்டு மக்கள் மே தினத்தை கொண்டாடி வருகின்றனர். இப்பயங்கரமான அவலத்தில் எந்த மாற்றமும்
இல்லாமலே, இந்த ஆண்டும் மே தினத்தை கொண்டாட நேரிட்டுள்ளது.
போலியான அலை ஊடாக திறமையற்றதொரு ஜனாதிபதியை பதவியில் அமர்த்தி நாடே வங்குரோத்து நிலைக்கு தள்ளியது. எஞ்சியதை மக்கள் ஆணையை இழந்த நிழல் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் உழைக்கும் மக்கள் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு சற்றும் பொருந்தாத சம்பளத்தால் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் மிகவும் கஷ்டப்படுகிறது.
நாட்டின் பொருளாதார இயக்கிகளான நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் பல்லாயிரக் கணக்கில் மூடப்பட்டு வருவதால், வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் தலைவர்களெனக் கூறிக் கொள்பவர்கள் கூட வாய் திறக்காதுள்ளனர். நாட்டின் மாற்று அரசாங்கமாகிய நாம் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.
இப்போது தேர்தல் ஆண்டுக்கு வந்திருக்கிறோம். இம்முறையும் ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக் கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்களுக்காக அர்ப்பணித்துச் செயற்படும் அரசாங்கத்தையும், தலைவரையும் நியமித்து மீண்டும் ஒரு நாடாக எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
இதனை அடையும் பொருட்டு, இன, மத, சாதி வேறுபாடின்றி நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.