குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் திட்டத்தின் கீழ்,34 இலட்சம் குடும்பங்களுக்கு தரமான அரசி விநியோகிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளதாக, சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டத்தின் கீழ் 34,08,076 குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 91 சதவீதமானோருக்கு அரிசி விநியோகிக்கப் பட்டுள்ளது.குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு கிறது.
அரிசி விநியோகம் தொடர்பில் வடக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், சுகாதார திணைக்களங்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி விநியோகிக்கப்பட்ட சுமார் 34 இலட்சம் அரிசி மூடைகளில்,11 அரிசி மூடைகளில் மட்டுமே பிரச்சினைகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள து.அத்துடன், இரத்தினபுரி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் காலாவதியான திகதியுடன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்களின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மெதபிட்டிகம மற்றும் திக்வெல்ல ஆகிய கிராமங்களில் விநியோகிக்கப்பட்ட 07 அரிசி மூடைகளின் தரம் தொடர்பில் சிக்கல்கள் பதிவாகியுள்ளன.
பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி மூடைகளையும் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் விசாரணைகள் முடியும் வரை அரிசி விநியோகத்திற்காக பணம் வழங்குவதை நிறுத்துமாறு திறைசேரிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சமூக விவகாரங்களுக்கான ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.