பலாங்கொடை வெலிக்கபொல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் சில மணித்தியாலங்கள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அப்பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெலிக்கபொல பிரதேச செயலகப்பிரிவில் நேற்றுமுன்தினம் இரவு மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சில வீதிகள் நீரால் சூழப்பட்டதுடன் போக்குவரத்து நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தன.
அதன்பின்னர் போக்குவரத்து தடை நீக்கப்பட்டு ஒருபக்க வீதி போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. வெலிக்கபொல, யட்டிபஸ்கமுவ, வெலிகபொல, ஹடங்கல வீதிகளில் சில இடங்களில் மண்சரிவுடன் மரங்கள், கற்கள் வீதியில் வீழ்ந்துள்ளதால் அவை படிப்படியாக அகற்றப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட இடர்முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)