சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மே தின நிகழ்வுகள் பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளன.
இதுதொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவிக்கையில் எமது கட்சியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தின நிகழ்வுகள் பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேநேரம் எமது மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள எமது கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து வாகனப் பேரணியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகரை அடையவுள்ளது. குறிப்பாக தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரை வழங்கவுள்ளனர்.
(கரவெட்டி தினகரன்,பருத்தித்துறை நிருபர்கள்)