அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலமாக சிட்னி தமிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. தமிழிசை, தமிழ் கலை, நாட்டுப்புறக் கலைகள், மரபுசார்ந்த கலைகள், தமிழர் வீர விளையாட்டுகள் அனைத்தையும் தற்போதுள்ள தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் அரிய பணியை செய்து வருகிறார்கள்.
கடந்த 28.4.2024 அன்று சிட்னி நகரில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்தினார்கள். கலைநிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள். பழங்கால தமிழ்நாட்டு விளையாட்டுகளும் நடைபெற்றன.
அனைவருக்கும் தமிழரின் மரபு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இந்நிகழ்ச்சியை மன்றத்தின் நிர்வாகிகள் கோச்சடை முத்தரசு, சத்தியசீலன், பேரின்பமூர்த்தி, பழனி, வனிதா முத்துசாமி, மதன்குமார், உலோகன், மதன்சத்தியமூர்த்தி, பார்த்திபன், வைஷ்ணவி பிரியா, கரிகால்வளவன், ராஜேஷ், நந்தா கோவிந்தன், நித்தியா, வெங்கி உட்பட பலர் சிறப்பாக நடத்தினர். ஏராளமான தமிழ் மக்களும், அவுஸ்திரேலிய நாட்டு அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சிட்னி தமிழ் மன்றமானது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். சிட்னி தமிழ் சமூகம், தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், சீஷெல்ஸ், மொரிஷியஸ், பிஜி ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடமும் அதன் தோற்றம் மற்றும் பாரம்பரியத்தை போற்றும் அதேவேளையில், அவுஸ்திரேலிய சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
இலக்கியம், நாட்டுப்புற கலைகள், கலாசார விழாக்கள், இசை மற்றும் நாடகம், பாரம்பரிய நடனம் மற்றும் பாரம்பரிய இசை மூலம் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதே தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஐங்கரன் விக்கினேஸ்வரா