இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் சாதனை படைத்துள்ளார்.
ஜெய்பூரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் எட்டாவது ஓவரை வீச வந்த சாஹல் முஹமது நபியின் விக்கெட்டை வீழ்த்தியபோதே இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பருவத்தில் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய ட்வாயன் பிராவோவின் சாதனையை முறியடித்த சாஹல் தனது 153 ஆவது போட்டியிலேயே 200 விக்கெட்டுகளை எட்டினார்.
சாஹல் 2011 இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தமானபோதும் 2013 ஆம் ஆண்டிலேயே தனது முதல் ஐ.பி.எல். போட்டியில் ஆடினார். பின்னர் 2014 இல் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்ட அவர் அந்த அணிக்காக 113 போட்டிகளில் ஆடிய நிலையில் 2022 இல் ராஜஸ்தான் றோயல்ஸுக்கு விலைபோனார்.