நுவரெலியா நகரில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசௌகரியப்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி, வீதிகளில் கைக்குழந்தைகள், சிறுவர்களுடன் ஊதுபத்தி விற்பனை செய்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் தொடர்பில் அதிகாரிகள் அல்லது பொறுப்பு வாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் தினமும் பெருமளவு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வந்து செல்லும் நிலையில் யாசகர்கள் மற்றும் ஊதுபத்தி விற்கும் பெண்களின் தொல்லை தினசரி அதிகரித்து வருவதாகவும் , ஊதுபத்தி விற்பது போல் பெண்களை வசியப்படுத்தி நகைகளை பறிக்க முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டு தொடர்ந்து காணப்படுகின்றது.
இவர்கள் ஒரு குழுவாகவே வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்து குறித்த பெண்கள் கைக்குழந்தையுடன் அமர்ந்து இருக்கின்றனர், அதிகமானவர்கள் கர்ப்பிணிப் பெண்களாகவும், பாலூட்டும் தாய்மார்களாகவும் உள்ளனர். இதில் சிறுமிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.