மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் அவரது வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.க. செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
அதனையடுத்து சிறந்த சமூக செயற்பாட்டாளராக இருந்த சர்வோதய இயக்கத்தின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்னவின் பூதவுடலுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவை சர்வோதய தலைமையகத்துக்கு நேற்று முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் பதிவிட்டார்.
பின்னர் உறவினர்களுடன் சிறிது நேரம் உரையாடி அவர்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன உள்ளிட்ட பலரும் இதன்போது உடன் இருந்தனர்.