நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 07 பேர் (18) கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பை நடத்தியதுடன், இதன்போது பாதாள உலக குழுக்களைச் சேர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 10 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
பேலியகொடையில் மேல் மாகாணத்தின் வடபிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மொரட்டுவையைச் சேர்ந்த 34 வயது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
ஹங்வெல்ல, தலங்கம, வெல்லம்பிட்டியவில் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரணால, நுகேகொடை மற்றும் ஒருகொடவத்தையைச் சேர்ந்த 22, 23, 40, 43 வயதுடைய 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல்லேகெலவைச் சேர்ந்த 45 வயது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
மிட்டியாகொடவில் காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பில் பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 483 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.