கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன
128-Slice CT Scan மூலம் பொதுமக்களுக்கான வைத்திய சேவைகள் அமைச்சின் செயலாளர், வைத்தியர் பாலித மஹிபால தலைமையில் ஆரம்பமானது.
220 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த அதிநவீன CT ஸ்கேன் இயந்திரமானது சுகாதார அமைச்சால் முன்னெடுக்கப்படும் சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்டுள்ளது.
விரைவான, பாதுகாப்பான மற்றும் துல்லியமான நோயறிதலுக்கு 128-Slice CT Scan இயந்திரம் உதவுவதுடன், நோயை தீர்மானிப்பதற்கும் தேவையான கண்டறியும் தரவையும் வழங்குகிறது.
வாகன விபத்துகள், தாக்குதல்கள், விழுதல் போன்றவற்றால் மூளை மற்றும் முதுகுத்தண்டு பாதிப்புக்குள்ளான நோயாளர்கள், மூளைக்கட்டிகள், மூளைப்புற்றுநோய், மூளையில் இரத்தக்கசிவு போன்றவற்றுக்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்கள், உயர் இரத்த அழுத்தமுள்ள நோயாளர்களுக்கு மூளைக்குள் இரத்தக்கசிவை நிறுத்த சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்கள், சத்திரசிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் இந்த CT ஸ்கேன் இயந்திரம் நோயின் நிலையை கண்டறிய, தேவையான அறிக்கைகளை பெறவும் பயன்படுகிறது.
தேசிய வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் 10 சத்திரசிகிச்சை அலகுகள், 02 தீவிர சிகிச்சை பிரிவுகள், அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் 200 படுக்கைகள் திறன் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுகளை கொண்டுள்ளது. இப்பிரிவில் விசேட பயிற்சி பெற்ற மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கடமையாற்றுகின்றனர்.
அரசாங்க வைத்தியசாலையொன்றில் நிறுவப்பட்ட மிகப்பெரிய மற்றும் முக்கியமான நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவாகும். மேலும் இந்த நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவில் ஹெலிகொப்டர் தரையிறங்கும் வசதிக்கான (ஹெலிபேட்) கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.