ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அண்டை நாடுகளில் கடும் மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் டுபாய் விமானநிலையத்தின் செயற்பாடுகளில் தொடர்ந்து இடையூறு நீடித்து வருகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த அடைமழையால், வீதிகள் மற்றும் பரபரப்பான சர்வதேச விமானநிலையத்தின் சில பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பியது. இந்த திடீர் வெள்ளத்தில் ஓமானில் 20 பேர் உயிரிழந்ததோடு ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார். சில உள்வரும் விமானங்கள் நேற்று (18) செயற்பாடுகளை ஆரம்பித்தபோதும், டுபாய் சர்வதேச விமானநிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை.
உலகின் இரண்டாவது பரபரப்பான விமானநிலையமாக இருக்கும் இந்த விமானநிலையத்தின் 1ஆவது முனையத்தின் உள்வரும் விமானங்கள் வியாழக்கிழமை (நேற்று) செயற்பாட்டை ஆரம்பித்தபோதும் வெளிச்செல்லும் விமானங்களில் தொடர்ந்து தாமதம் நீடிப்பதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பதிவுகள் உறுதி செய்யப்பட்டால் மாத்திரம் விமானநிலையத்திற்கு செல்லும்படி அதிகாரிகள் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக கடந்த புதனன்று (17) 300க்கும் அதிகமான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டதோடு நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் தாமதம் அடைந்தன.