இந்தோனேசியாவில் எரிமலை ஒன்று ஐந்து முறை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோரை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதோடு, அருகில் இருக்கும் விமானநிலையத்தை மூடிய நிர்வாகம் எரிமலை சிதைவுகள் விழுந்து சுனாமி ஏற்படும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
சுலாவெசி தீவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்து இரண்டு கிலோமீற்றருக்கு மேல் புகையை கக்கியதோடு எரிமலை குழம்பையும் கக்கி வருகிறது. இதனால் விழிப்பு நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் 11,000 குடியிருப்பாளர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்பாளர்கள் நேற்று (18) ஈடுபட்டிருந்தனர். சில குடியிருப்பாளர்கள் ஏற்கனவே அச்சத்தால் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
எரிமலையின் ஒரு பகுதி நிலைகுலைந்து கடலில் விழலாம், பெரிய அளவில் அலைகள் எழலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிருடற்சேதம் குறித்துத் தகவல் இல்லை.
அண்மையில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பின் எரிமலையின் குமுறல் அதிகரித்துள்ளது.
எரிமலை வெடிப்பால் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சபா, சரவாக் மாநிலங்களுக்கான சேவைகளை ரத்துச் செய்துள்ளது.