நாட்டை கடன் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டுமானால் முறையான திட்டமொன்றை தயாரிப்பது அவசியம் என்றும் அவ்வாறில்லாவிட்டால் நாட்டு மக்கள் நீண்டகாலத்துக்கு அந்தக் கடனை செலுத்த நேரிடும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் கடன் சுமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“மின்சார சபை நட்டத்தில் இயங்கும் போது அந்த நட்டத்தை நாட்டு மக்களே நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
அந்த வகையில் தொடர்ச்சியாக அவ்வாறு நட்டம் ஏற்பட்டால் அதற்காக முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டியது அவசியமாகும்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து நாட்டுக்கு வேலைத்திட்டமொன்றை தயாரித்து வழங்கியுள்ளன.
அது நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவதை தவிர்க்கக்கூடிய முறைமையாகும்.
பழைய சித்தாந்தங்களிலிருந்து விலகி நாட்டை கடன் சுமையிலிருந்து மீட்க வேண்டுமானால் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்களில் மறுசீரமைப்பை மேற்கொள்வது அவசியமாகும். அவ்வாறில்லா விட்டால் மீண்டும் நாடு வங்குரோத்து நிலையை அடைவதை தடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்