அல்லாஹ் தனது அடியார்கள் மீது பர்ளான வணக்கங்களுடன் உபரியான வணக்கங்களையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். ஏனெனில், உபரியான வணக்கங்களைப் பொருத்தவரையில் அது பர்ளான வணக்கங்களில் அடியார்களிடம் ஏற்படும் குறைகளை ஈடுசெய்யக்கூடியதாக அமையும்.
ஒரு அடியான் அல்லாஹ்வை உபரியான வணக்கங்களின் மூலமாக நெருங்கும் போது அவனை அல்லாஹ் விரும்புகின்றான். அதனால் ரமழான் மாதத்திற்கு அடுத்து வரக்கூடிய ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளை நோற்பதை மார்க்கம் எமக்கு சுன்னத்தாக ஆக்கியுள்ளது. அந்த நோன்புகளையும் நபி (ஸல்) அவர்கள் ஊக்குவித்துள்ளதோடு அதன் சிறப்புகளையும் எடுத்துக் கூறியுள்ளார்கள்
‘ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளையும் நோற்றவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஸஹீஹு முஸ்லிம்)
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு வழங்கியுள்ள விளக்கத்தின் படி, ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் ஷவ்வால் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்ச்சியாக நோற்பது (முஸ்தஹப்) விரும்பத்தக்கதாகும்.
எனினும், ஒருவர் அதனை அம்மாதத்திற்குள் விட்டு விட்டு நோற்பதும், ஷவ்வால் மாதத்தின் ஆரம்பப் பகுதியை விட்டும் அதனை பிற்படுத்தி அம்மாதத்திற்குள் நோற்பதும் ஆகுமானதாகும்.
ஆகவே, ஒவ்வொருவரும் மேற்படி வழிகாட்டல்களுக்கமைய அவரவரது சக்திக்கேற்ப அதனை ஷவ்வால் மாதத்திற்குள்ளே நோற்றுக்கொள்வது சிறப்பானதாகும். அதற்கேற்ப முயற்சிப்போம்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் (காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்