பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி) மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் தனது கலாநிதி கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளார்.
‘சமூக நலனை ஏற்படுத்துவதில் ஸகாத் நிறுவனங்களது வகிபாகம்… முஸ்லிம் சிறுபான்மை சட்டத்தின் ஒளியில் ஓர் ஆய்வு’ எனும் தலைப்பில் கலாநிதி கற்கை நெறிக்கான ஆய்வுக்கட்டுரையை இவர் சமர்ப்பித்தமை விசேட அம்சமாகும்.
பன்னூல் ஆசிரியரான அஷ்ஷெய்க் அரபாத் கரீம், சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். சீனன்கோட்டை அல்ஹுமைஸரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான இவர், பல நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளையும் உள்நாட்டில் வெளிவருகின்ற இஸ்லாமிய சஞ்சிகைகளில் தொடராக எழுதியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இவருக்கு சீனன்கோட்டை பிரதேச சமூக சேவை அமைப்புகள், முக்கியஸ்தர்களும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளன.
சீனன்கோட்டை ஸகாத் கமிட்டியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் சீனன்கோட்டை பௌண்டேசனின் பிரதித்தலைவராகவும் செயற்பட்டு வரும் இவர், சீனன்கோட்டையைச் சேர்ந்த அல்ஹாஜ் ஜிப்ரி, மர்ஹூமா சித்தி நளீரா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார்.
அஜ்வாத் பாஸி