அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தெரிவு அண்மையில் இடம்பெற்றது. இந்நம்பிக்கையாளர் சபையில் பல துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய நம்பிக்கையாளர் சபை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.ஹனீஸை தலைவராகக் கொண்டு இயங்கி வருகின்றது. இப்புதிய நிருவாக சபையினர் பல்வேறு வேலைத் திட்டங்களை மக்கள் நலனை மையப்படுத்தி செயற்படுத்தும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள பாலமுனை, அட்டாளைச்சேனை, ஒலுவில், ஆலம்குளம், சம்புநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையினரை உள்ளடக்கி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்நிருவாக சபையில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் பல்வேறு துறைகளில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் சிறந்த சேவையினை இவர்களால் வழங்க முடிகிறது. ஆளுமையும் செயற்றிறன் மிக்கவர்களும் இந்நம்பிக்கையாளர் சபையில் உள்ளமையினால் மக்களுக்கு சிறந்த சேவைகளையும் பொது நலன் சார் செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்ல முடிகின்றது.
இதற்கமைவாக,அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேனளத்தின் பிரதிநிதிகளுடனான விஷேட கலந்துரையாடலொன்று அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கணனி விஞ்ஞான விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவருமான ஏ.எல்.ஹனீஸ் உரையாற்றும்போது, “தற்போதுள்ள சூழ்நிலையில் நம் நாட்டில் சிறந்த வக்பு சபை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவானதும் நீதியானதுமான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நடைமுறையினை உருவாக்கிய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்போதுள்ள வக்பு சபையில் சிறந்த சட்ட வல்லுநர்கள், கல்வியியலாளர்கள், உலமாக்கள், புத்திஜீவிகள், நிருவாகத் திறன் மிக்கோர் இச்சபையில் அங்கம் வகிக்கின்றனர். நேரடியாக இச்சபையினை அணுகி எந்த மொழியிலும் தமது கோரிக்கையினை முன்வைக்கின்றபோது உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி பள்ளிவாசல்கள் மத்ரஷாக்கள் போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
எம்.ஏ.றமீஸ்
அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்