Tuesday, May 21, 2024
Home » CSK அணியில் யாழ். இளைஞன் குகதாஸ் மாதுலன்

CSK அணியில் யாழ். இளைஞன் குகதாஸ் மாதுலன்

- வலை - பந்துவீச்சாளராக அணியில் இணைப்பு

by Prashahini
March 20, 2024 3:40 pm 0 comment

IPL 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.

IPL தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

முன்னதாக கடந்த வருடம் காயத்தால் முழுமையாக விளையாடாத தீபக் சஹருக்கு பதிலாக இலங்கையின் இளம் வீரர் மத்தீஷ பதிரன வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்பில் இலங்கை ஜாம்பவான் முன்னாள் வீரர் லசித் மலிங்கா போல சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5ஆவது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினர்.

அதனால் மும்பைக்கு மலிங்காவை போல சென்னைக்கு பதிரன கிடைத்துள்ளதாக CSK இரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் மலிங்காவை போலவே சிலிங்கா ஆக்சனை பயன்படுத்தி பந்து வீசும் மற்றுமொரு இளம் பந்துவீச்சாளரை CSK கண்டறிந்துள்ளது.

யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் 17 வயதுடைய வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுலன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வலை- பந்துவீச்சாளராக இணைந்து கொண்டுள்ளார்.

IPL ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் மாதுலன் இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 117ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டியில் சென். ஜோன்ஸ் சார்பாக பந்துவீசிய மாதுலன், எதிரணி வீரர் தகுதாஸ் அபிலாஷை இரண்டாவது இன்னிங்ஸில் யோக்கர் பந்தின் மூலம் ஆட்டம் இழக்கச் செய்திருந்தார்.

அவரது பந்துவீச்சுப் பாணி லசித் மாலிங்கவின் பந்துவீச்சை ஒத்ததாக இருந்ததுடன் மாதுலன் வீசிய யோக்கர் பந்து சமூக ஊடகங்களில் பரவியது.

இதனை அடுத்து இளம் வீரர் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை பார்க்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். தோனி விரும்பியதாக செய்தி வெளியாகியது.

இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் உரிமையாளர்களால் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் இருக்கும் குகதாஸ் மாதுலனின் பந்துவீச்சை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பயிற்றுநர் குழாம் அவதானித்து வருவதடன் அவருக்கு தேவையான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதாக அறியக் கிடைக்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT