ஹெய்ட்டியில் கடந்த பல வாரங்களில் வன்முறை அதிகரித்த நிலையில் அந்நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலகியுள்ளார்.
ஹெய்ட்டியில் ஆட்சி மாற்றம் ஒன்று குறித்து ஜமைக்காவில் பிராந்திய தலைவர்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆயுத கும்பல்கள் நாடு திரும்புவதை தடுத்த நிலையில் பிரதமர் ஹென்றி தற்போது போர்டோ ரிகோவில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் வீடியோ அறிவிப்பு ஒன்றின் மூலம் தனது இராஜினாமாவை அறிவித்த பிரதமர் நாட்டு மக்களை அமைதி காக்கும்படி அழைப்பு விடுத்தார். ‘(ஆட்சி மாற்ற) சபை அமைக்கப்பட்ட பின் நான் தலைமை வகிக்கும் அரசு உடன் பதவி விலகும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அடிப்படையில் 2021 ஜூலையில் பிரதமராக பதவியேற்ற ஹென்றி, தொடர்ந்து தேர்தலை ஒத்திவைத்து வந்தார். இந்நிலையில் பிரதமரை பதவி விலகக் கோரி ஆயுத கும்பல்கள் தலைநகர் போர்ட் அவு பிரின்ஸ் வீதிகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.