மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகங்களில் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது எதிர்வரும் மார்ச் 04 முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்காக தானியங்கி தொலைபேசி இலக்கம் மற்றும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றித் தெரிவித்துள்ள அவர், மார்ச் 04 முதல் நாட்டிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கத்தின் அனைத்து அலுவலகங்களிலும் சேவை பெற்றுக்கொள்ள விரும்புவோர் கட்டிப்பாக தமக்கான திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அதற்காக தானியக்க தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி 02117116 என்ற தொலைபேசி இலக்கத்தில் தமக்குத் தேவைப்படும் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக அழைப்பை ஏற்படுத்தமுடியும். தமக்கான சேவையை தெரிவுசெய்த பின்னர் தமது தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் வழங்கவேண்டும். அதனையடுத்து விண்ணப்பதாரரின் தொலைபேசி இலக்கத்துக்கு உரிய அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தியில் சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய திகதியும் நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக www.dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்