பொதுமக்களின் அத்தியாவசிய சேவையை நிறைவேற்றும் இ.போ.ச ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்த இடமளிக்க முடியாதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இ.போ.ச மற்றும் தனியார் பஸ் ஊழியருக்கிடையிலான மோதல் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்: வன்முறையை எவர், பிரயோகித்தாலும் நீதிமன்றத்துக்குச் சென்று நீதியை நிலைநாட்ட வேண்டும்.பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை சரியாக நிறைவேற்றுவது அவசியம்.
இ.போ.ச மற்றும் இ.போ.ச ஊழியர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும். அவர்களுக்காக காப்புறுதி முறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதலுக்குள்ளானமை மற்றும் துன்புறுத்தலுக்கு இலக்கானமையால், இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஊடக அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர், தாம் ஏற்கனவே தலையிட்டு அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கடுத்துள்ளதாகவும், இதுவரை எந்த அமைச்சரும் செயற்படாத வகையில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிடத் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் அல்லது துன்புறுத்தல்களில் ஈடுபடுவோரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்து தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
நுகேகொடையில் இருந்து ஹோமாகம பிடிபன வரை பயணிக்கும் இ.போ.ச பஸ் சாரதி மற்றும் நடத்துநர் மீது தனியார் பஸ் ஊழியர்கள் குழுவினர், தாக்குதல் நடத்தியமை தவறென தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
லோரன்ஸ் செல்வநாயகம்