திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எஸ்.எம்.எம்.முஷாரப்பின் பெரும் முயற்சியினால் பொத்துவில் பிரதேசத்துக்கு குடிநீர் இணைப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். இதனை கருத்திற்கொண்டு சுமார் 5 கிலோமீற்றர் தூரம் குழாய்கள் பதிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று 3 கிலோமீற்றருக்கான குழாய் பதிக்கும் உடனடி செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக பொத்துவில் பிரதேசத்திற்கு குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொத்துவில் காரியாலய பொறுப்பதிகாரி அஸீஸ் தலைமையில் ஹெட ஓயா, நீர் உள்ளீர்ப்பு உந்து நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கலந்து சிறப்பித்ததுடன் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம். முஷாஜித், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பொறியியலாளர்கள், மதத்தலைவர்கள், கமக்கார அமைப்பின் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை விசேட நிருபர்