புத்தளம் – சின்னப்பாடு கடற்பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் என்பன நேற்று முன்தினம் (13) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேகத்தில் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 21,45 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கடலோர பாதுகாப்பு கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சின்னப்பாடு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, 41 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 1177 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் 150 போத்தல் பூச்சி கொல்லி மருந்துகள் என்பன இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்