இலங்கை – இந்திய நட்புறவு ஒன்றியம் “மலையகம் 200″யை அனுஷ்டிக்கும் வகையில் எதிர்வரும் 2023.03.10ஆம் திகதி கண்டி நகரத்தில் உள்ள கெப்பிட்டிபொல மண்டபத்தில் பாராட்டு மற்றும் கௌரவிப்பு விழாவொன்றை நடத்தவுள்ளது. மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பேராசிரியர் துரைமனோகரன், பாராளுமன்ற உறுப்பினர் திலகர்,
தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மத்திய மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மாகாண பணிப்பாளரும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம். ஏ. எட்மண்ட் பெரேரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் அனுசரணையுடன் நடத்தப்படவுள்ள இவ்விழாவில், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், சமூக சேவையாளர்கள் என பலரும் கௌரவிக்கப்படவுள்ளனர். ஊடகவியவாளர்கள் “ஊடகச் செம்மல்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். கலைஞர்களும் சமூக சேவையாளர்களும் பத்மவிபூஷண விருது வழங்கி கௌவிக்கப்படவுள்ளனர். மலையகம் 200யை அடிப்படையாக வைத்து இந்த ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளதால் இங்கு கௌரவிக்கப்படவுள்ள அனைவருக்கும் மலையகம் 200 என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்படுவார்கள். அத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.