மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அடம்பன்,ஆண்டாங்குளம்,உயிலங்குளம் ஆகிய கிராம சேவகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் நலன்கருதி விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்றிட்டங்களை மெதடிஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்றையதினம் இலவச மருத்துவ முகாம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் மன்னார் அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க க.கனகேஸ்வரன்,முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல்,மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், பொது சுகாதார பரிசோதகர் உட்பட மூன்று கிராம சேவகப்பிரிவுகளைச் சேர்ந்த 150 மேற்பட்ட முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(மன்னார் குறூப் நிருபர்)