எமது ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களை தொழிலாளி என்று அழைக்க மாட்டோம். அவர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
எம்மை விமர்சிப்பவர்கள் கூலிக்கு ஆட்களைப் பிடித்து தமக்கு பாரிய செல்வாக்கு இருப்பதாகக் காட்டுகின்றனர். இப்படி எப்போதும் ஏமாற்றமுடியாது. எம்மை ஏமாற்ற நினைப்பவர்கள் ஹேவாஹெட்ட, தெல்தோட்டை, கலஹா போன்ற இடங்களுக்கு வந்து பாருங்கள்.
இன்று தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். நாம் அதற்கு சரியான பதிலை அடுத்த தேர்தல் மூலம் காட்டுவோம். எமது ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என அவர் தெரிவித்தார்.
அக்குறணை குறூப் நிருபர்