இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு -2024 உப்புவெளி, திருகோணமலை ஜேக்கப் பீச் றிசோட்டில் நேற்று (28) நடைபெறவிருந்தது. எனினும், இம்மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் அதன் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவின் தலைமையில் நேற்று முன்தினம் (27) திருகோணமலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட கட்சிக்கான பதவிக்கு நியமிக்கப்பட்டவர்களை, புதிய தலைவர் சிவஞானம் சிறிதரன் அறிவித்தார்.
இதன்போது சிலர், புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த சண்முகம் குகதாசனின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் கட்சிக்காரர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பைச் சேர்ந்த ஞானமுத்து சிறிநேசன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவையர் குலநாயகம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த சண்முகம் குகதாசன் ஆகியோர் செயலாளர்களுக்கு விருப்பம் தெரிவித்தனர்.பின்னர், மூவரும் சேர்ந்து குகதாசனைத் தெரிவு செய்ததாக கட்சியின் புதிய தலைவர் தெரிவித்தார்.
இந் நிலமையை கருத்தில் கொண்டு கட்சியின் மாநாட்டுக்கான திகதி, ஒரு வாரத்தின் பின் நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கமைவாக அறிவிக்கப்படும் என யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விஷேட நிருபர்