நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளோ அல்லது இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்பட மாட்டாதென, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதேவேளை, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் மூலம் எதிர்வரும் தேர்தலின் போது சுயலாபம் பெற்றுக்கொள்வது அரசாங்கத்தின் நோக்கம் அல்லவெனவும், அவர் தெரிவித்தார்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் பொருளாதாரம் பலமடைந்து வரும் நிலையில் சமூகத்தை சிறந்த முறையில் முன்னேற்றமடைய செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் எந்தவிதத்திலும் அந்தச் சட்டம் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட மாட்டாது.
அத்துடன், அதனை வைத்து அரசாங்கம் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்ளவும் போவதில்லை. சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்