இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்கு உட்பட்டு வருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து, தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் பங்கேற்று கருத்து
தெரிவிக்கையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ:
1983 இல், இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி 1,800 இலங்கை தமிழர்களை கனடாவில் குடியேற்றியது.
இந்த தொகை கடந்த பல தசாப்தங்களில் அதிகரித்து இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக கனடா மாறியுள்ளது.
அத்துடன் கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்களிப்பு வியக்கத்தக்களவில் உள்ளது . இதன் காரணமாகவே 2016ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தை தமிழர் வரலாற்று மாதமாக கனேடிய அரசாங்கம் பிரகடனம் செய்தது. இந்நிலையில் இலங்கை தமிழர்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கனடா தொடர்ந்தும் சர்வதேச மனித உரிமைகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புக்களுடன் செயற்பட்டு வருகிறது. வேறு எந்த நாடுகளும் நடைமுறைப்படுத்தாத வகையில், இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கனடா தடைவிதித்துள்ளது.
தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.