– பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் கைது
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் நேற்று (18) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
லொறி ஒன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் தனது சிறிய லொறியில் கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து தம்பலஸ்ஸ பகுதி ஊடாக தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பொலிஸாரின் உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை நிறுத்தி சோதனையிட்டபோது, பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி இயங்கி சாரதி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லொறியின் சாரதி நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது அருகில் இருந்த ஒருவர் அதனை கைத்தொலைபேசியில் பதிவு செய்திருந்தார்.
வெத்தேவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தையடுத்து பிரதேசவாசிகள் நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குவிந்ததையடுத்து அந்த இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, ஆத்திரமடைந்த மக்கள், பொலிஸ் நிலையத்தின் முன்னிலையில் வன்முறையில் ஈடுபட்டனர். பொலிஸாரின் சொத்துக்களுக்கும் இக்குழுவினர் சேதம் விளைவித்துள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.