லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேணை பெரிய இராணிவத்தை தோட்டத்தில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தீ விபத்தில் நிர்க்கதியான இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 09 பேர் பொது வாசிகசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மூன்று வீடுகளில் இரண்டு வீடுகளில் மாத்திரமே குடும்பத்தவர்கள் இருந்ததாகவும் ஒரு வீட்டில் யாரும் இருக்கவில்லையெனவும் தெரியவருகின்றது.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மேலும் பெரிய இராணிவத்தை தோட்டத்தில் இலக்கம் (01) தொடர் குடியிருப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வேளையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 16 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேர் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்திட்டத்தில் இரண்டாவது தீ விபத்து சம்பவமும் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 10 வீடுகளை கொண்ட தொடர் வீட்டுத்தொகுதியில் மூன்று வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏனைய வீடுகளுக்கும் தீ பரவுவதை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அதேநேரத்தில் மூன்று வீடுகளிலிருந்த துணிகள், தளபாடங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பாவனை பொருட்கள் சேதமாகியுள்ளன. சேதவிபரங்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(ரமேஷ், மஸ்கெலியா தினகரன் விசேட, ஹற்றன் விசேட நிருபர்கள்)