அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதி
‘நீர் மற்றும் சுகாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான மாற்றத்தை துரிதப்படுத்துதல்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சர்வதேச நீர் மாநாடு 2023, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் 2023 டிசம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இரத்மலானையில் அமைந்துள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சிறந்த மையத்தில் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுத் துறையின் அபிவிருத்திகள் தொடர்பில் உரையாற்றினார்.
அத்துடன் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சமரதிவாகர, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க ஆகியோரும் இதன்போது உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்ட உலக வங்கியின் சர்வதேச நீர் இயக்குனர் சரோஜ் குமார் ஜா நீர்ப்பாதுகாப்பு, பசுமை நெகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவிய நடவடிக்கை நிகழ்ச்சிநிரலை நிறுவுவதற்கான உலகளாவிய கூட்டு நடவடிக்கை குறித்த தனது அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்துகொண்டார்.
நிபுணத்துவ அமர்வுகள், வர்த்தக அமர்வுகள், தொழில்நுட்ப அமர்வுகளுடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் களவிஜயம் ஆகியனவும் இம்மாநாட்டின்போது நடைபெற்றன.
நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு துறையில் மாற்றத்தை துரிதப்படுத்தும் வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, காலநிலை மாற்றம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் ஆகியவற்றுக்கான நிலையான தீர்வுகள் பற்றிய பயனுள்ள விரிவுரைகள் உலகெங்கிலுமுள்ள தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களினால் நிபுணத்துவ அமர்வுகளின்போது நிகழ்த்தப்பட்டன. வர்த்தக அமர்வுகளின்போது நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுத் துறையின் முன்னணியில் ஒத்துழைக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் எட்டாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு கருத்தரங்கும் இதன்போது நடைபெற்றது. இது நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுத் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு ஊக்கியாக செயற்பட ஒரு தளத்தை உருவாக்கியது. இதன்போது கேள்வி_-பதில் நிகழ்ச்சியும் மற்றும் குழு விவாதங்களும் நடைபெற்றன.
நடந்து முடிந்த சர்வதேச நீர்மாநாடானது சமீபத்திய தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் பிற முன்னேற்றங்கள் பற்றிய அறிவை கற்றுக்கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் சிறந்ததொரு வாய்ப்பாகும். இது பிராந்திய ரீதியில் நாட்டின் நீர் மற்றும் சுகாதாரத் துறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தாக்கத்தை விரைவுபடுத்துகிறது.