மின் கட்டணத்தை எதிர்வரும் பெப்ரவரியில் குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், (வற் )வரி மின் கட்டணத்தில் தாக்கம் செலுத்தாதெனவும், இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைவர் மஞ்சுள பெர்ணான்டோ தெரிவித்தார்.
மின் கட்டண திருத்தம் தொடர்பாக வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“மின் கட்டண திருத்தம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்தினோம். நீர் மின்னுற்பத்தி, நிலக்கரி மற்றும் எரிவாயுவுடனான மின்னுற்பத்தி, அதற்கான செலவு தொடர்பான தரவுகளை மின்சார சபையிடம் கோரியுள்ளோம். எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி சகல தரவுகளையும் வழங்குவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மின் கட்டண திருத்தம் தொடர்பாக மின்சார சபை முன்வைக்கும் யோசனைகளை முன்னிலைப்படுத்தி, ஜனவரியின் இறுதி வாரத்தில் மின் கட்டணம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கோரவும் தீர்மானித்துள்ளோம்.
மின்சார சட்டத்துக்கமைய மின் கட்டண திருத்தம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் வெளிப்படையான முறையில் முன்னெடுக்கப்படும்” என்றார்.