சமூக அபிவிருத்தி மன்றத்தின் இரத்தினபுரி மாவட்ட வருடாந்த மீளாய்வு கூட்டம் மன்றத்தின் தலைவர் எப். சால்ஸ் மொஹான் ரவி மற்றும் Weeffect நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மயூரன் தேவ சிகாமணி ஆகியோர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரத்தினபுரி வாடி வீடு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சமூக அபிவிருத்தி மன்றத்தினால் பொது மக்கள் மற்றும் அரச சேவையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் நலன் கருதி சமூக அபிவிருத்தி சேமிப்பு கணக்கு அறிமுகம் செய்யப்பட்டு அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
Weeffect நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மயூரன் தேவ சிகாமணியின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் நாட்டில் உள்ள தோட்டப்புற மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பெண் சமத்துவம் போன்றவற்றை மையமாக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் மேற்படி Weeffect நிறுவனம் இலங்கையில் உள்ள 14 சமூக நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தோட்டப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்ன, Weeffect நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தேவ சிகாமணி, Weeffect நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் நிஷாந்தி, சமூக அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் எப்.சால்ஸ் மொஹான் ரவி மற்றும் மனிதவள நிறுவனத்தின் உறுப்பினர் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
காவத்தை தினகரன் விசேட நிருபர்