கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு ஓரிரு வருடங்களுக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘பேரலையின் சக்தி’ தொடர் நிகழ்வுகளில் ஒன்றான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உபகரணங்கள், ஊக்குவிப்புத் தொகை மற்றும் உலருணவுப் பொதிகள் என்பன வழங்கப்பட்டன. அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருக்கிறார். மேலும் கடற்றொழிலை பாதுகாப்பதுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஓரிரு வருடங்களுக்குள் தீர்வை பெற்றுத்தருவேன் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா, அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரட்நாயக்க, மேலதிக செயலாளர் அனுஷா கோகுல, பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, தம்மிக்க ரணதுங்க, கபில குணரட்ன, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள உயரதிகாரிகள், நார நிறுவனத் தலைவர் பேராசிரியர் விஜேரட்ன, பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமல் குணரட்ன, நெக்டா நிறுவனத் தலைவர், பணிப்பாளர் நாயகம் திருமதி அசோகா மற்றும் துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.