இலங்கை கிரிக்கெட் புதிய தேர்வுக் குழு டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் மூன்று அணித் தலைவர்களை நியமிக்க திட்டமிடுவதாக தெரியவருகிறது.
உபுல் தரங்க தலைமையிலான புதிய தேர்வுக் குழு அண்மையில் சந்தித்து மூன்று வகை கிரிக்கெட்டுக்கு மூன்று தலைவர்களை நியமிக்கும் சாத்தியம் பற்றி பேசி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி திமுத் கருணாரத்னவுக்கு பதில் தனஞ்சய டி சில்வாவை டெஸ்ட் அணித் தலைவராகவும், குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்கவை முறையே ஒருநாள் மற்றும் ரி20 அணித் தலைவராகவும் நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியின் உப தலைவராக குசல் மெண்டிஸை நியமிப்பதற்கும் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளுக்கு உப தலைவராக சரித் அசலங்கவை நியமிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கான இலங்கை அணியை தேர்வு செய்வதற்கு தேர்வுக் குழுவினர் கூடும்போது இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இந்தத் தேர்வுக் குழு கூட்டம் இன்று (18) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மூன்றாம் திகதி இலங்கை வரும் சிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி20 சர்வதேச போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தியாவில் அண்மையில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்த பின்னர் நடைபெறும் தொடர் என்பதால் அணியில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.