எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டு, பாதியளவில் நிறுத்தப்பட்ட 39,815 வீடுகளின் பணிகளை, துரிதப்படுத்தி முழுமைப்படுத்துமாறு வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள சோலார் பேனல் வீடமைப்புத் திட்டம் மற்றும் கிராம வேலைத்திட்டத்துக்கான மின் உற்பத்தி நிலையத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் இவ்வீடுகளின் நிர்மாணப் பணிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச, வீடமைப்பு அமைச்சராக இருந்த 2015-2019 ஆகிய நான்கு வருடங்களில் நாடளாவிய ரீதியில் 2,158 கிராமங்களில் 39,815 வீடுகளை கட்டும் பணிகள் ஆரம்பமாகின. எனினும்,இவ்வீடுகள் பாதியளவிலே கட்டப்பட்டுள்ளன.இவற்றில் பலவை,வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு உதா கம்மானத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை பல உதா கம்மானவுக்கு பகுதிகளாக பகிர்ந்தளிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இவர்களது காலத்தில் பல கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டன என்பதைக் காட்டும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துளது.