இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி எழுதிய ஆங்கில மொழியிலான கட்டுரையைத் தழுவியது
சவூதி அரேபியாவானது அங்குள்ள ஆட்சிச் சட்டம், நீதி, ஆலோசனை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும், இஸ்லாமிய சட்டத்தின்படி மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறது.
மனித உரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் சவூதி அரேபியா பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
2005 ஆம் ஆண்டில் மனித உரிமைகள் ஆணையத்தை சவூதி அரேபியா நிறுவியது. இது பிரதமருடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஓர் அரச அமைப்பாகும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இது செயற்படுகிறது.
இந்த ஆணையகமானது அதன் பணிகளை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுத்த பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு உரிமை, சுகாதார உரிமை, வேலை செய்யும் உரிமை பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் உரிமைகள், வளர்ச்சிக்கான உரிமை, அரசியல் மற்றும் பொதுவாழ்வில் பங்கேற்பதை மேம்படுத்துவதற்கான உரிமைகள், சிவில் சங்கங்களை உருவாக்குதல் மற்றும் ஆதரித்தல் தொடர்பான உரிமைகள் போன்ற அனைத்து மனித உரிமைகளும் சவூதி அரேபியாவில் காணப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ‘விஷன் 2030’ என்ற தூரநோக்குடனான திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு துறைகளிலும் பரந்த மற்றும் தரமான சீர்திருத்தங்களை சவூதி அரேபியா மேற்கொண்டுள்ளது. இதில் பெண்கள் உரிமைகளும் அடங்கும். குறித்த சீர்திருத்தமானது பெண்களுக்கான உரிமைகளை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை ஒழிப்பதற்கான சட்டக் கட்டமைப்பை செயல்படுத்துவதில் முக்கிய பங்களித்தது.
2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குடும்ப விவகாரங்களுக்கான ஆணையத்தினூடாக குடும்ப விவகாரங்கள், அதன் கட்டமைப்பு என்பன முகாமைத்துவம் செய்யப்பட்டு, அதற்கான உரிமைகளும் முழுஅளவில் வழங்கப்பட்டு வருகின்றன.
சவூதி அரேபிய குடிமக்கள் அனைவருக்கும் தொழில் செய்யும் உரிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் பாலினம், அங்கக்குறைபாடு, வயது அல்லது வேறு எந்த வகையான பாகுபாடும் அவர்களுக்கு இடையே அனுமதிக்கப்படுவதில்லை.
ஓய்வு பெறும் வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக காப்பீட்டு முறையையும் சவூதி அரேபியா திருத்தம் செய்துள்ளது.
உண்மையில் ‘விஷன் 2030’ என்ற திட்டத்தினூடாக சவூதி அரேபியா பல துறைகளிலும் அபிவிருத்தி அடைந்து வருவதுடன், குடிமக்களுக்கான வசதிகள் மற்றும் உரிமைகள் என்பவற்றை துல்லியமான முறையில் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அஷ்ஷெய்க்
M.M.அஹ்மத் இம்தியாஸ்…
(மதனி) பின் பாஸ் மகளிர்
கல்லூரி, மல்வானை