கடற்றொழிலாளர் எதிர்நோக்கியுள்ள உற்பத்திச்செலவு பிரச்சினையை சமாளிக்கும் வகையில் மாற்றுத் திட்டத்தை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையேற்றத்தை சமாளிக்கும் வகையில் கடற்றொழிலாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதை சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கையின் கடலுணவுகளை கொள்வனவு செய்யும் நாடுகளும் விரும்பாதுள்ளன. இதனாலேயே மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (11) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதத்தில், கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “எமது கடற்றொழிலாளர்களின் தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு இந்த பட்ஜடில் வேறு வழிகளில் உதவுவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதி உதவியில் ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன். அதேவேளை, எமது விவசாய மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை கடற்றொழிலாளர்களுக்கும் வழங்க முடியும் என ஜனாதிபதி என்னிடம்
தெரிவித்துள்ளார். மேலும், மாற்று மின்வலு – குறிப்பாக மின்கலம், காற்றாலை, பாய்மரம் மற்றும் சூரிய சக்தி கொண்ட மின் வலுவில்
கடற்றொழில் படகுகளை செயற்படுத்தும் முயற்சிகள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகள் வெற்றியளித்துள்ளன . இதனை
வெகு விரைவில் நடைமுறைப் படுத்தவுள்ளேன். இதேவேளை அறுவடைக்குப் பின்னரான பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் நவீன குளிர்சாதன கருவிக் கட்டமைப்பை பொருத்துவது தொடர்பிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.