இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்த்து வைக்க இரு வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் இதுபற்றி விளக்கினார். இப்பிரச்சினைகளைத் தீர்க்க முதலாவது இராஜதந்திர ரீதியிலும் இரண்டாவது சட்ட நடவடிக்கை ரீதியிலும்
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இராஜதந்திர ரீதியாக பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் அவை
பயனளிக்கவில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகளாக கைதுகளைக் குறிப்பிட முடியும்.சில தினங்களுக்கு முன்னதாகவும்
இந்திய மீனவர்கள்அத்து மீறி எமது கடற்பரப்பு பிரதேசத்திற்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் எமது மீனவர்கள் கடற்படையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். கடற்படையினரும் வேண்டா வெறுப்பாக இந்திய மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இத்தகைய கைதுகள் பற்றி தமிழ்நாட்டில் பரப்பப்படும்போது அது பிரச்சினையாகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் தொழில் இது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை முறையற்ற விதத்தில் கைது செய்வதாக அங்குள்ளவர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதற்கிணங்க ஒரு புதிய வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நான் சிந்தித்துள்ளேன். அந்த வகையில் வடக்கிலுள்ள கடற் தொழிலாளர்கள் ஒரு குழுவாக தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது. அங்குள்ள ஊடகங்களுக்கும் இங்குள்ள உண்மை நிலையை தெளிவுபடுத்த முடியும்.
இந்திய மீனவர்கள் அத்துமீறியே இலங்கை கடற்பரப்பில் பிரவேசித்து வளங்களை அழிப்பதாகவும் இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாகவே கடற்படையினர் அவர்களை கைது செய்வதையும் அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
அது மட்டுமன்றி வட மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டுக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் இந்த பிரச்சனைகள் தொடர்பில் பேச முடியும். அத்துடன் அங்குள்ள ஊடகங்களுக்கும் அது தொடர்பில் தெளிவுபடுத்த முடியும்.
இந்த செயற்பாட்டிற்கு வடக்கிலுள்ள எம்பிக்கள் சிலர் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எனினும் சார்ள்ஸ் எம்பி அதற்கு இணக்கம் தெரிவிக்காமல்
இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து பேசலாம் என்று கூறுகிறார். அது ஒரு பிரச்சனை இல்லை. எனினும் அடிக்கடி இந்தியத் தூதுவர்கள் மாறுவதால், அதில் ஒரு சிக்கல் காணப்படுகிறது. எனினும் இந்திய தூதுவர்களுக்கு இந்த விவகாரம் அத்துப்படி. அவர்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முழுமையாக அறிந்துள்ளார்கள்.
அதற்கிணங்க சார்ள்ஸ் எம்பி இதனை புரிந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு சென்று இந்த பிரச்சனை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என நான் நம்புகின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் போது குறுக்கிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்பி , இலங்கையில் உள்ள இந்திய தூதுவர்கள் மாறினாலும் தமிழ் நாடு போன்ற மாநில அரசாங்கத்துடன் நாம் பேச்சு வார்த்தை நடத்தாமல் இந்தியா என்ற பாரிய அரசாங்கத்துடன் பேசினால் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே எமது எதிர்பார்ப்பு என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்