திருகோணமலை மாவட்டம் கிண்ணியா வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்து பகுதியில் இறந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானையின் உடலானது இன்று (10) மாலை மீட்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று யானையின் இறப்பு பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
உயிரிழந்த குறித்த யானை எட்டு வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும் தெரியவருகிறது.
இறந்த யானை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளனர். மேலும், யானையின் உயிரிழப்பு தொடர்பில் கால் நடை வைத்திய அதிகாரியின் உடல் கூற்று பிரேத பரிசோதனை இடம் பெறவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வான்எல பொலிஸார் மற்றும் கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
தம்பலகாமம் குறூப் நிருபர்