பாராளுமன்றத்தில் தன்னிச்சையாக செயற்பட எவருக்கும் இடமளிக்க வேண்டாமென்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தை நகைச்சுவை அரங்கமாகவும் நாடக மேடையாகவும் ஆக்கக்கூடாதெனத் தெரிவித்த பிரதமர், தினமும் காலையில் பாராளுமன்றம் கூடும் போது அது நாடக அரங்கம் போல் காட்சியளிப்பதாகவும் இது போல் செயற்படுத்த முடியாதெனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 இல் கேள்விகளை எழுப்பும் போது, நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் உரிய தீர்மானம் எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத்தில் (01) எதிர்க்கட்சித் தலைவர் 27/2 இல் கேள்விகளை எழுப்பிய போது, அக்கேள்விக்கு மேலதிகமாக மேலும் கேள்விகளை எழுப்பினார். இதன்போது, அவர் எழுப்பிய எந்தக் கேள்விக்கு பதில் கூற வேண்டுமென்று பதில் கூறுவதற்கு தயாராகவிருந்த இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர, சபாநாயகரிடம் வினவினார். இந்நிலையில், சபையில் ஏற்பட்ட சர்ச்சையிலேயே , பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த பிரதமர், 27/2 இன் கீழ் கேள்விகளை எழுப்பும் போது, அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமாவென்று கேள்வி எழுப்பியதுடன், அது தொடர்பாக உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டுமென்றும் நாளை முதல் அது நடைமுறைக்கு வரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்த பிரதமர், சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்ய முடியுமானாலும், ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது. தாம் பாராளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்துக்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்