வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நேற்று (26) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்கள் உள்ளிட்ட காரணங்களைக்கருத்திற்கொண்டு பொலிஸ் அதிகாரிகள் 138 பேர் மற்றும் இராணுவ அதிகாரிகள் 200 பேர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மேல் மாகாணம் தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லலித் அபேசேகர ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். இதன்போது ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத மதுபானம், வாள்கள், தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் 40 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.