பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த இருவர் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஹாலிஎல பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில், கந்தகொல்ல பிரதேசம், ஹாலிஎல உடுவர 7ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் தனுஷா (22) மற்றும் அவரது தோழியான மாகொலவத்தை, ஹாலிஎல நடுத்தர வர்க்க குடியிருப்பை சேர்ந்த அன்பழகன் கீர்த்திகா (21) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உடுவர 7ஆம் கட்டை, ஹாலிஎல, கந்தகொல்ல பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் தனுஷா என்பவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள மலை இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று விஸ்வநாதன் தனுஷா என்பவரின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மாலை 4.45 மணியளவில் வீடு திரும்பிய போது விபத்தை கண்டுள்ளனர். மண் மேட்டின் கீழ் புதையுண்ட இரண்டு யுவதிகள் தொடர்பில் உடனடியாக ஹாலிஎல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸ் ஜீப் வண்டி சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதேவேளை கடும் மழையின் காரணமாக பதுளுஓயா ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக பதுளை விஹாரகொடை பகுதியில் உள்ள சுமனதிஸ்ஸகம பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள சுமார் 70 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தின் பதுளை- வெளிமடை வீதியில் புகுல்பொல பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதால் அவ்வீதியினூடான போக்குவரத்து மாலை 6.00 மணிக்கு பிறகு தடைசெய்யப்பட்டுள்ளது.
பிபிலை – பதுளை வீதியின் 179 ஆவது மைல்கல் பகுதியில் வீதியில் வீழ்ந்துள்ள கற்பாறையை அகற்றும் பணிகள் மூன்று நாட்களாக நடைபெறுவதால் பதுளை – பிபிலை வீதியின் போக்குவரத்து லுணுகலை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பசறை- நமுனுகுல வீதியில் கனவரல்ல பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக அனர்த்தங்கள் அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
பசறை நிருபர்
ஹாலிஎல விசேட நிருபர்