கடும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 100 மில்லிலீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
அதற்கமைய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் வசிப்போர் இதனை கருத்திற் கொண்டு எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் கங்கவட்ட கோரளே, உடபலாத, உடதும்பறை, பாத்தும்பறை, உடுநுவர, மற்றும் மெததும்பறை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் வத்துகாமம் – மடுல்கலை பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹதரலியந்த துங்கும்புற கொங்கிறீட் பாலம் கடும் மழை காரணமாக சேதமடைந்துள்ளது. இதனால் பொல்வத்தை, மாவத்தகம, மினிகமுவ, எலட்டுவாவ போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் மக்கள் அசௌகரியங்களை அனுபவித்துவருகின்றனர்.
(அக்குறணை குறூப் நிருபர்)